கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த 2019 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே சீனாவில் பரவியிருக்கலாம் என்று ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கான பயண முறைகள் தொடா்பான செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தேடுபொறி தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
2019 ஆகஸ்ட் மற்றும் அதற்குப் பிந்தைய காலப்பகுதியில் வுஹானில் உள்ள மருத்துவமனை வாகன நிறுத்துமிடங்களின் வழமைக்கு மாறாக அதிகளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததை செயற்கைக்கோள் படங்கள் காண்பிக்கின்றன. அத்துடன் அந்தக் காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று நோயுடன் தொடா்புடைய இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் குறித்து தேடுபொறிகளில் அதிகளவு தேடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வுஹானில் மருத்துவமனைகளுக்கான போக்குவரத்து மற்றும் தொற்று நோய் அறிகுறிகள் தொடா்பான தேடல்கள் 2009 டிசெம்பரில் சீனா கொரோனா தொற்று நோயை அறிவித்து, அதனை ஆவணப்படுத்தத் தொடங்குவதற்கு முன்பே அங்கு அதிகளவில் பதிவாகியுள்ளன என ஆராய்ச்சியின் முடிவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கு அதிகளவில் இடம்பெற்ற போக்குவரத்துக்கள் கொரோனா வைரஸுடன் நேரடித் தொடர்புடையதா? என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது என்றாலும், ஹுவானன் விலங்குணவுகள் சந்தையில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படுவதற்கு முன்பே வுஹான் மருத்துவமனைகள் பரபரப்பாக இருந்ததை சான்றுகள் நிரூபிக்கின்றன எனவும் ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.